தில்லி கலால் முறைகேடு வழக்கு: கேஜரிவாலை கைது செய்ய சிபிஐக்கு அனுமதி
தில்லி கலால் முறைகேடு வழக்கில் கேஜரிவாலை கைது செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி
புது தில்லி: தில்லி கலால் ஊழல் விவகாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ய தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து அரவிந்த கேஜரிவால் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், அரவிந்த கேஜரிவாலை முறைப்படி கைது செய்து விசாரணை நடத்த தில்லி உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவாலை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கலால்கொள்கை கொண்டுவரப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கேஜரிவால் கைது செய்யப்பட்டாா். தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே கேஜரிவால் மக்களவைத் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே வந்து பிணைக் காலம் முடிந்ததும் அவர் சிறையில் சரணடைந்தார்.
தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு, கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத் துறை தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீனுக்குத் தடை விதித்து நேற்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.