13 ஆண்டுகளாக கோமா! கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
13 ஆண்டுகளாக கோமாவில் செயலற்ற நிலையில் இருக்கும் ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
உத்தர பிரதேசத்த்தில் 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் காசியாபாதை சேர்ந்த ஹரிஷ் ராணா என்பவர், 2013-ல் பஞ்சாபில் ஒரு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், மூளையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக 100 சதவிகித இயலாமைக்கு ராணா தள்ளப்பட்டார்.
விபத்துக்குப் பிறகு, மருத்துவக் குழாய் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்து மூலம் மட்டுமே ராணாவின் உயிர் காக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ராணாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அவரது உயிர்வாழும் சிகிச்சையைத் திரும்பப்பெற அனுமதிகோரி, அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர்.
அவரது உடல்நிலை மீள முடியாதது என்று மருத்துவ அறிக்கைகள் ஒப்புக்கொண்டாலும், மருத்துவக் குழாய் மூலம் வழங்கப்படும் உணவால் ராணாவின் உயிர் காக்கப்பட்டு வருவதாகக் கூறி, 2018 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கருணைக் கொலை மேற்கொள்ள முடியவில்லை.
இதனிடையே, ராணாவின் சிகிச்சையால், அவரது குடும்பத்தினருக்கு பெரும் நிதிச் சுமை ஏற்பட்டதாகவும் அவரது சகோதரர் ஆஷிஷ் கூறினார்.
ராணாவின் சிகிச்சை மற்றும் பராமரிப்புச் செலவுக்காக, ஒவ்வொரு மாதமும் ரூ. 24, 000 முதல் ரூ. 30,000 தேவைப்படுவதாகக் கூறி, துவாரகாவில் உள்ள வீட்டையும் விற்றுவிட்டதாக ஆஷிஷ் கூறினார்.
இந்த நிலையில்தான், ஹரிஷ் ராணா குணமடைய வாய்ப்பில்லை என்று எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை தெளிவுபடுத்தியது.
இதனையடுத்து, செயலற்ற நிலையில் கோமாவில் இருக்கும் ஹரிஷ் ராணாவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளை நிறுத்த அனுமதியளித்து, கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்மூலம், செயலற்ற நிலையில் இருக்கும் ஒருவரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும்.