ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்ற மோடி, ராகுல்!
மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக ஓம் பிர்லா தேர்வு.
மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
நாட்டில் முதல்முறையாக நடைபெற்ற மக்களவைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக எம்பி ஓம் பிர்லா வெற்றி பெற்றார். இதுநாள் வரை ஒருமனதாகவே மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகள் கேட்ட நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தர மறுக்க, மக்களவைத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்களவைத் தலைவர் பதவிக்கான குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஓம் பிர்லாவை மோடியும், ராகுல் காந்தியும் ஒன்றுசேர அழைத்துச் சென்று மக்களவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
தொடர்ந்து, ஓம் பிர்லாவை வாழ்த்தி மோடியும், ராகுல் காந்தியும் அவையில் உரையாற்றினர்.