முகப்பு
இந்தியா

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அதிகரித்துள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் குற்றச்சாட்டு.

Updated On : 27 ஜூன், 2024 at 7:33 AM
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென்
பகிர்:

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து வெளியுறவுத்துறை வெளியிடும் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில், சிறுபான்மையினரின் மதச் சுதந்திரம் மீது தொடர்ந்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், உலகெங்கிலும் மக்கள் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர்” என்று ஆண்டனி ப்ளிங்கென் கூறினார்.

Advertisement

இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளன. அதில் , சில மாநிலங்களில் திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரக் குறைபாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, வன்முறைகளில் இருந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்களை விசாரிப்பது, சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்த விஷயங்களில் சில சிறுபான்மைக் குழுக்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சட்டுகளை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அவர்கள் தவறானத் தகவல்களைப் பரப்புவதாகவும், இந்த அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்றும் கடந்தாண்டு கூறியிருந்தது.

மேலும், அமெரிக்காவுடனான உறவை மதிப்பதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் வெளிப்படையான உரையாடல்கள் தொடரும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆண்டின் அறிக்கையில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாகவும், சில நேரங்களில் அவர்கள் துன்புறுத்தப்பட்டு, பொய் வழக்குகள் மூலம் சிறையில் அடைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதங்களுக்குத் தனி சட்டம் இருப்பதை மாற்றி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பிரதமர் மோடியின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இஸ்லாம், சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பழங்குடியின மக்களும், சில மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கான முயற்சியாக இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் அதன் மூலம் சமத்துவம், பெண்ணுரிமை பாதுகாக்கப்பட்டு, பலதார திருமணங்கள் தடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் மதச் சுதந்திர நிலைமையைக் கணிகாணிப்பில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments