காஷ்மீர் வந்தடைந்த 4,600 பேர் அடங்கிய முதல் குழு!
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை நாளை தொடங்க உள்ள நிலையில் 4,600 பேர் அடங்கிய முதல் குழு காஷ்மீர் பள்ளத்தாக்கை அடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர் வந்தடைந்த நிலையில், அமர்நாத் 4,603 பக்தர்களையும் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் காசிகுண்ட் பகுதியில் உள்ள நவ்யுக் சுரங்கப்பாதையில் காவல்துறை, சிவில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.
52 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை இரண்டு பாதைகளில் பயணிக்கும். அனந்த்நாக்கில் உள்ள பராம்பரிய 48 கி.மீ நூன்வான்-பஹல்காம் பாதை வழியாகவும், கந்தர்பாலில் 14 கி.மீ பால்டால் பாதை வழியாகவும் செல்லவிருக்கின்றனர்.
அமர்நாத் புனித பயணம் சனிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 19 அன்று நிறைவடைகிறது. ஜம்முவின் பகவதி நகரில் உள்ள யாத்திரி நிவாஸில் இருந்து காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அமர்நாத்தின் ஆசியால் பயணிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பை அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றார். மேலும் பாதுகாப்புடன் பயணிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
அமர்நாத் குகை லிங்கத்தை எப்படியாவது தரிசித்து விட வேண்டும் என்று ஆனந்தத்தில் பக்தர்கள் "பம் பம் போலோ... ஹர ஹர மகாதேவ்" என்று பலத்த கரகோஷத்துடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு சுமார் 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் குகைக் கோயிலுக்குச் செல்லும் இரண்டு வழிகளிலும் 125 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு சேவை செய்வார்கள்.
பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடங்களில் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளன. இந்தாண்டு என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், உள்ளூர் காவல்துறையினர், பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் ஆகியவற்றிலிருந்து 38 மீட்புக் குழுக்கள் அமர்நாத் யாத்திரைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.