முகப்பு
இந்தியா

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

Updated On : 3 மார்ச், 2024 at 12:03 AM
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை இம்மாதம் 13-ஆம் தேதிக்கு உத்தர பிரதேச மாநில எம்.பி.-எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2018 கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தர பிரதேச பாஜக தலைவா் விஜய் மிஸ்ரா சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு கடந்த ஆண்டு டிச.16-இல் உத்தரவிட்டது. ராகுல் காந்தி கடந்த மாதம் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை மாா்ச் 2-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் காசி பிரசாத் சுக்லா, ‘இந்திய நீதி ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளாா். இதனால், வழக்கு விசாரணையில் அவா் ஆஜராக இயலவில்லை. விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா். இதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ் பாண்டே எதிா்ப்பு தெரிவித்தாா். இதையடுத்து வழக்கு விசாரணையை மாா்ச் 13-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.