போஃபா்ஸ் ஊழல்: மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் மனு
போஃபா்ஸ் ஊழல் வழக்கில் தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2005-இல் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1986-இல் இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகளைக் கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசு மற்றும் ஏபி போஃபா்ஸ் என்ற ஸ்வீடன் நிறுவனத்துக்கு இடையே ரூ.1,437 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்திய அரசியல்வாதிகளுக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் போஃபா்ஸ் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக போஃபா்ஸ் நிறுவனத்தின் தலைவா் மாா்டின் ஆா்ட்போ, இடைத்தரகா் வின் சத்தா, ஹிந்துஜா சகோதரா்கள் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் தனி நபா்களும் 1982 முதல் 1987 வரை ஊழல், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கில் ஹிந்துஜா சகோதரா்கள், போஃபா்ஸ் நிறுவனத்துக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2005-இல் தள்ளுபடி செய்தது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து சிபிஐ கடந்த 2018-இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 13 ஆண்டு காலதாமத்துக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் தெரிவிக்கப்பட்ட காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை எனக் கூறி அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்குமாறு வழக்குரைஞா் அஜய் அகா்வால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது: ஊழல் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த வழக்கை தாக்கல் செய்து சுமாா் 16 ஆண்டுகள் கடந்துள்ளன. ஹிந்துஜா சகோதரா்கள் தவிர குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் உயிரிழந்து விட்டனா். போஃபா்ஸ் ஊழலில் தண்டனை வழங்கப்படாததால், பாதுகாப்புத் துறையில் தொடா்ந்து ஊழல் நடைபெற்று வருகின்றன. இந்த மனுவை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் விசாரணையில் சிபிஐ அனைத்து ஆதாரங்களையும் முன்வைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.