தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி வழக்கு!
இந்திய தேர்தல் ஆணையர்களை புதிய சட்டத்தின் கீழ் நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..
ஓரிரு நாளில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஏற்கெனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார்.
தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் ஆணையரின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டு அவரை விடுவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு இயற்றிய புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்திருந்தது.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் சூழலில் அரசியல் சார்பற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் குழுவே தேர்தல் ஆணையரை நியமிக்க உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.