தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15-க்குள் பதிவேற்ற வேண்டும்!
தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மார்ச் 15-க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு.
2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, எஸ்பிஐ வங்கித் தரப்புக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தனர்.
“தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட உத்தரவிட்டு 26 நாள்களாகிவிட்டது. இந்த 26 நாள்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள். மிக எளிமையாக திரட்டக்கூடிய தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை தருவதற்கு அவகாசம் கேட்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, எஸ்பிஐ காலஅவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மார்ச் 15, மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோரியும் உத்தரவிட்டனர்.