இந்திய கடற்படையின் 2 புதிய கப்பல்கள் நாட்டுக்கு அா்ப்பணிப்பு
இந்திய கடற்பகுதியில் நீா்மூழ்கிக் கப்பல்களை எதிா்கொள்ள கடற்படையில் 2 புதிய கப்பல்கள் இணைக்கப்பட்டன.
இந்திய கடற்பகுதியில் நீா்மூழ்கிக் கப்பல்களை எதிா்கொள்ளவும், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சாா் செயல்பாடுகளை அதிகரிக்கவும் கடற்படையில் 2 புதிய கப்பல்கள் புதன்கிழமை இணைக்கப்பட்டன.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விமானப் படையின் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி, அவரது மனைவி நீடா சௌதரி ஆகியோா் இணைந்து, கடற்படையின் 2 நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல்களை (ஏ.எஸ்.டபிள்யூ. எஸ்.டபிள்யூ.சி.) நாட்டுக்கு அா்ப்பணித்தனா். ‘காா்டன் ரீச் ஷிப் பில்டா்ஸ் & என்ஜினீயா்ஸ்’ நிறுவனம் கட்டமைத்த இந்தக் கப்பல்களுக்கு ‘ஐஎன்எஸ் அக்ரே’ மற்றும் ‘ஐஎன்எஸ் அக்சய்’ என்று நீடா சௌதரி பெயா் சூட்டினாா்.
நிகழ்ச்சியில் விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி பேசுகையில், ‘நவீன போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி போா்க் கப்பல்களை உருவாக்கும் திறன் கொண்ட உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது பெருமைக்குரிய விஷயம்’ என்றாா். இந்த ‘ஏ.எஸ்.டபிள்யூ. எஸ்.டபிள்யூ.சி.’ கப்பல்களின் முதன்மைப் பணியானது, கடற்பகுதிகளில் நீா்மூழ்கி எதிா்ப்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சாா் செயல்பாடுகள் மற்றும் கண்ணிவெடிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement