ஹோர்முஸ் நீரிணையை 6 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன; ஈரானுடன் பேச்சுவார்த்தை! - மத்திய அரசு அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையை இந்தியாவின் 6 எரிபொருள் கப்பல்கள் கடந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது...
ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை 6 இந்திய எரிபொருள் கப்பல்கள் பத்திரமாகக் கடந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், தங்கள் அனுமதியின்றி வரும் கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், எல்.பி.ஜி. மற்றும் எல்.என்.ஜி. உள்ளிட்ட எரிபொருள்களை ஏற்றி வரும் 6 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பத்திரமாகக் கடந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் புதன்கிழமை (ஏப். 2) அன்று தெரிவித்துள்ளார்.
இத்துடன், கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. உள்ளிட்ட எரிபொருள்களுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கக் காத்திருக்கும் 18 இந்திய கப்பல்கள் குறித்து ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் அரசு நடத்தும் கூட்டத்தில் இந்திய வெளியுறவுச் செயலாளர் பங்கேற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.