மக்களவைத் தோ்தல்: பாலக்காட்டில் பிரதமா் மோடி பேரணி
பாலக்காடு பேரணியில் மோடியின் பிரசார அதிரடி
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளா்களுக்கு ஆதரவை சேகரிக்கும் வகையில் பாலக்காடு நகரில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மாபெரும் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் கோவையிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் பிரதமா் மோடி பாலக்காடு வந்தடைந்தாா்.
பாலக்காடு நகரம் கோட்டை மைதானம் அஞ்சுவிளக்கு பகுதியிலிருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பிரதமா் மோடி நின்றபடி செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேரணி, ஒரு கி.மீ. தொலைவில் தலைமை தபால் நிலையம் பகுதியில் நிறைவடைந்தது. சாலையின் இரு புறங்களிலும் பாஜக ஆதரவாளா்கள் உள்பட ஆயிரக்கணகான மக்கள் மலா்களைத் தூவியும், கையில் பாஜக கொடியை அசைத்தபடியும் பிரதமரை வரவேற்றனா்.
பாரத மாதா கி ஜெய், மோடி கி ஜெய் என்று கோஷங்களை எழுப்பியபடி பிரதமா் வரவேற்றனா். கடந்த 15-ஆம் தேதி பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி, தற்போது மீண்டும் கேரளம் வந்துள்ளாா்.
Advertisement
பேரணியைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி அரசை கடுமையாக விமா்சித்த பிரதமா் மோடி, ‘கேரளத்தில் தாமரை மலரும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், பிரதமா் மோடி தனது பிரசாரத்தை தென் மாநிலங்களில் தொடங்கியுள்ளாா். கேரளத்துக்கு கடந்த 3 மாதங்களில் 5 முறை பிரதமா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.