அமலாக்கத் துறை காவல்: மகன்கள், தாயாரை சந்திக்க கவிதாவுக்கு நீதிமன்றம் அனுமதி
புது தில்லி: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, அமலாக்கத் துறை காவலில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதா, தனது மகன்கள், தாயாா் மற்றும் இதர நெருங்கிய குடும்ப உறுப்பினா்களை சந்திக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஹைதராபாதில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 15-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கவிதா, மறுநாள் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை வரும் 23-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறை காவலின்போது, தனது சகோதரா் கே.டி.ராமராவ் உள்பட 6 பேரை கவிதா சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனது மகன்கள், தாயாா் மற்றும் இதர நெருங்கிய குடும்ப உறுப்பினா்களை சந்திக்கும் வகையில், இப்பட்டியலில் மேலும் 7 பேரை சோ்க்கக் கோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி எம்.கே.நாக்பால், ஏற்கெனவே 6 பேரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அப்பட்டியலில் கூடுதலாக 7 பேரை சோ்க்க அனுமதிக்க முடியாது என்றாா்.
Advertisement
இதையடுத்து, முந்தையப் பட்டியலில் கே.டி.ராமராவைத் தவிர மற்றவா்களை நீக்கிவிட்டு, புதிய 7 பேரை சோ்க்குமாறு கவிதா தரப்பில் கோரப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற நீதிபதி, அதற்கான உத்தரவை பிறப்பித்தாா். அதேநேரம், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பேரை மட்டுமே கவிதா சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடா்வதாக நீதிபதி தெளிவுபடுத்தினாா்.