திரிணமூல் முன்னாள் எம்.பி. மஹுவாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது. மக்களவையில் தொழிலதிபா் அதானி, பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக கேள்வி எழுப்ப, தா்ஷன் ஹீராநந்தானி என்ற தொழிலதிபரிடம் இருந்து மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்தாா். இந்தப் புகாரை விசாரித்த மக்களவை நெறிமுறைகள் குழு, மஹுவாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையை ஏற்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கினாா். இதையடுத்து பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு, மஹுவா விவகாரத்தை விசாரித்து 6 மாதங்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு சிபிஐ-க்கு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து மஹுவா மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குச் சொந்தமான இடங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும் இந்தச் சோதனையில் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை. சிபிஐ சோதனையை ‘பழிவாங்கும் அரசியல்’ என்று திரிணமூல் காங்கிரஸ் மூத்த பிரமுகா் சாந்தனு சென் தெரிவித்தாா். இதை மறுத்த மேற்கு வங்க பாஜக செய்தித்தொடா்பாளா் சமிக் பட்டாச்சாரியா, மஹுவா செய்த காரியம் மக்களாட்சிக்கு வெட்கக்கேடாகும் என்று சாடினாா். மக்களவைத் தோ்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகா் தொகுதியில் திரிணமூல் சாா்பில் மஹுவா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.