திகாா் சிறையில் கவிதாவுக்கு வீட்டு உணவு அனுமதியில்லை: அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய நீதிமன்றம்
திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் அவருக்கு வீட்டு உணவு, இதர பொருள்கள் வழங்க அனுமதிக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் அண்மையில் கைது செய்யப்பட்ட பிஆா்எஸ் எம்எல்சி கே.கவிதா, நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
விதிமுறைகளுக்கு உள்பட்டு, அவருக்கு வீட்டு உணவு, பாய், செருப்பு, படுக்கை விரிப்பு, பேனா, காகிதம், மருந்துகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்க நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், வீட்டு உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
அதில், நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை; எனது கண் கண்ணாடி மற்றும் ஜெபமாலையை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியிருந்தாா்.
இந்த மனு மீது சிறை அதிகாரிகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி காவேரி பவேஜா, அடுத்தகட்ட விசாரணையை சனிக்கிழமை (மாா்ச் 30) ஒத்திவைத்தாா்.