27.3.1976: வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கடத்தல் பொருள்கள் - இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்
வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கடத்தல் பொருள்கள் கைப்பற்றல் பற்றி...
புதுடில்லி, மார்ச் 26 - கடிகாரங்கள், கணக்கு யந்திரக் கருவிகள் பிலிம்கள் போன்ற பல கடத்தல் பொருள்கள் கடந்த பிப்ரவரி 29-ம் தேதியன்று சில வெளிநாட்டுத் தூதராலய அதிகாரிகளிடமிருந்து பாலம் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன.
வெளி விவகார மந்திரி ஒய். பி சவாண் இன்று ராஜ்ய சபையில் இத்தகவலைக் கூறினார்.
ஆனால் அவர்கள் எந்த நாட்டுத் தூதராலய அதிகாரிகள், பெயர் என்ன என்ற விவரங்களையெல்லாம் அவர் கூறவில்லை.
சம்பந்தப்பட்ட தூதுவராலயத்திடம் கடும் ஆட்செபம் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து வாபஸ் பெறப்பட்டு விட்டனர். சமீபத்தில் சில மாதங்களில் இதைப் போன்ற சம்பவம் வேறு எதுவும் நடந்ததாகக் கண்டு பிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
நெய்வேலி அனல் மின் நிலைய விரிவுபற்றி ஆய்வு நடக்கிறது
சென்னை, மார்ச். 26 - நெய்வேலியில் இரண்டாவது சுரங்கம் ஒன்றை வெட்டுவதன் மூலமாக நெய்வேலி அனல் மின்சார நிலையத்தை விரிவு படுத்துவது பொருளாதார ரீதியாக அவசியமா என்பதைக் கண்டறிய ஆய்வு நடக்கிறது என்று தமிழ்நாடு கவர்னரின் ஆலோசகர் ஆர்.வி. சுப்ரமணியம் இன்று தெரிவித்தார்.
"நெய்வேலி அனல் மின்சார உற்பத்திக்கு ஆகின்ற செலவு, தெற்கு பிராந்தியத்தில் உள்ள இதர மாநிலங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், அதனைத் தமிழ் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் ஆகின்ற செலவு ஆகியவை ஒப்பிடப்படும்.
பிற மாநிலங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தமிழ் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஆகக் கூடிய செலவைவிட நெய்வேலி அனல் நிலைய மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைவானது என்று தெரிய வருமானால் நெய்வேலி அனல் மின்சார நிலையம் இரண்டாவது சுரங்கம் ஒன்றை வெட்டுவதன் மூலம் விரிவு படுத்தப்படும். எனவே நெய்வேலி அனல் மின்சார நிலையத்தை மேற்கொண்டு விரிவுப் படுத்துவது பொருளாதார உண்மைகளைப் பொறுத்ததாக இருக்கும்" என்று சுப்பிரமணியம் இன்று தென்னிந்திய தொழில் வர்த்தக சபைக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.