அனல் மின் திட்டங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் அனல் மின் திட்டங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்திருப்பது குறித்து...
தமிழ்நாட்டில் எப்போது அனல் மின் உற்பத்தியை முடிவுக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க முடியாது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை என்றும், சில தனி மனிதர்கள் செய்யும் சதியாலும், மின் கருவிகளின் பழுதாலும் தான் மின்தடை ஏற்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது. எத்தனைத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றைக் கடந்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, காரணங்களைக் கூறுவதை விடுத்து மின்வெட்டை முற்றிலுமாகத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் மின்தேவை அதிகரித்தால், அதை சமாளிக்க முடியாத நிலை இருப்பதை மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உறுதி செய்திருக்கின்றன. மின்சார வாரியத்தின் சொந்த மின்னுற்பத்தி நிலையங்கள், மத்திய மின்தொகுப்புகள், தனியார் மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் மின்சார வாரியத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ள மின்சாரத்தின் அளவு 21,393 மெகாவாட் மட்டுமே. இயல்பான சூழலில் இதில் 90% அளவுக்கு மட்டுமே மின்னுற்பத்தி செய்ய முடியும். நேற்று முன்நாள் 22 ஆம் தேதி மாலை நிலவரப்படி, 89.40%, அதாவது 19,126 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை தமிழகத்தின் மின் தேவை 21,307 மெகாவாட்டாக உயர்ந்தது. இது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து ஆதாரங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறனில் 99.60% ஆகும். இந்தத் தேவையை அரும்பாடுபட்டு தான் மின்வாரியம் சமாளித்தது. நடப்பாண்டின் எஞ்சியுள்ள கோடைக்காலத்தில் காற்றாலை மின்சாரம் கை கொடுக்காவிட்டால், தமிழகத்தின் மின்தேவை அதிகரிக்கும் சூழலில் அதை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இனி வரும் ஆண்டுகளில் மின்தேவை மேலும், மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்ள உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவை கிட்டத்தட்ட 22 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ள நிலையில், அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமாக உள்ள அனல் மின் நிலையங்கள், நேற்றைய நிலையில் உற்பத்தி செய்த மின்சாரம் வெறும் 3110 மெகாவாட், அதாவது 14.13% மட்டும் தான். நீர்மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டாலும் தமிழ்நாடு மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நேற்றைய நிலையில் 3529 மெகாவாட், அதாவது 16.04% மட்டுமே. மீதமுள்ள 84% மின்சாரத் தேவைக்காக மத்திய அரசு மின் நிலையங்களையும், தனியார் மின்நிலையங்களையும் தமிழகம் சார்ந்துள்ளது.
சொந்த மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட, பல மடங்கு அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவது தான் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டமடைவதற்கும், மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ.2.50 லட்சம் கோடியைத் தாண்டியதற்கும் முதன்மைக் காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.45 ஆயிரம் கோடிக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, அதனால், மின்வாரியத்திற்கு ரூ.1.50 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்த பிறகும் கூட, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் மின்வாரியத்தின் நஷ்டத்தை போக்க முடியவில்லை. தமிழகத்தின் சொந்த மின்சார உற்பத்தியை அதிகரிக்காமல் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது. ஆனால், அதற்கான எந்தவித நடவடிக்கையையும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பது தான் வேதனை.
திமுக ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது மொத்தம் 5700 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டங்களை அமைக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் இருந்தன. திமுக அரசு நினைத்திருந்தால், அனைத்து மின் திட்டப் பணிகளையும் நிறைவேற்றி முடித்து உற்பத்தியைத் தொடங்கியிருக்க முடியும். ஆனால், அதிமுக ஆட்சியில் 90% பணிகள் முடிவடைந்திருந்த வடசென்னை மூன்றாவது அனல் மின்நிலையத்தில் மட்டும் தான் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் வணிகரீதியான மின்னுற்பத்தியைத் தொடங்கியது. மீதமுள்ள 4,900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையப் பணிகள் இன்று வரை நிறைவடையவில்லை.
1. உடன்குடியில் தலா 660 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட நிலையங்களை அமைக்க 2012 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அதன் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஆண்டில் தான் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் முதல் அலகில் சோதனை அடிப்படையில் மின்னுற்பத்தித் தொடங்கப்பட்டுள்ளது.
2. உப்பூரில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டில் அவற்றில் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இப்போது இந்தத் திட்டத்தை உடன்குடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
3. எண்ணூரில் 660 மெகாவாட் திறன் கொண்ட மாற்று அனல் மின் நிலையம் 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
4. எண்ணூர் சிறப்புப் பொருளாதார மணடலத் திட்டம் என்ற பெயரில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் அமைக்கும் பணிகள் பத்தாண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது தான் இதில் 73% பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் எட்டப்பட வேண்டும் என்றால், மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். கடந்த ஆட்சியில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனல் மின் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அவை எப்போது உற்பத்தியைத் தொடங்கும்? புதிதாக என்னென்ன மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன? கார்பன் சமநிலையை அடைவதற்காக தமிழ்நாட்டில் எப்போது அனல் மின் உற்பத்தியை முடிவுக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.