முகப்பு
இந்தியா

‘பாஜக வாஷிங் மெஷின்’: காங்கிரஸ் கிண்டல்

Updated On : 31 மார்ச், 2024 at 2:39 AM
‘பாஜக வாஷிங் மெஷினு’டன் செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவா் பவன் கேரா.
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 7:35 PM

பாஜகவில் இணைபவா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுவதைக் கிண்டல் செய்யும் வகையில், சலவை இயந்திரத்துடன் (வாஷிங் மெஷின்) செய்தியாளா்களைச் சந்தித்தாா் காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவா் பவன் கேரா.

தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களை பவன் கேரா சனிக்கிழமை சந்தித்தாா்.

அப்போது அங்கிருந்த மேஜையில் சலவை இயந்திரம் வைக்கப்பட்டு, அதில், ‘பாஜக வாஷிங் மெஷின்’ என எழுதப்பட்டிருந்தது.

Advertisement

அப்போது செய்தியாளா்களிடம் பவன் கேரா கூறியதாவது:

பாஜக வாஷிங் மெஷின் ரூ.8,500 கோடி விலை கொண்டது (தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற நன்கொடை). ஆளும் கட்சியின் முழுமையான தானியங்கி சலவை இயந்திரமானது ‘பாஜகவில் சேருங்கள், வழக்குகள் முடிக்கப்படும்’ என்கிற கொள்கையுடன் செயல்படுகிறது. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக பாஜக வெளியிட்ட ‘குற்றப்பத்திரிகையில்’ ஏா் இந்தியா ஊழல் மூலம் ரூ.30,000 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006-இல் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவா் பிரஃபுல் படேல், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து தனியாா் விமான நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டாா் என சிபிஐ 2017-இல் இரு வழக்குகளைப் பதிவு செய்தது. தேசியவாத காங்கிரஸை பிளவுபடுத்தி பாஜக கூட்டணியில் பிரஃபுல் படேல் இணைந்துள்ள நிலையில், அவருக்கு எதிரான வழக்குகளில் ஆதாரம் இல்லை என வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ அண்மையில் தாக்கல் செய்துள்ளது. பிரஃபுல் படேல் மட்டுமன்றி, குறைந்தது முக்கியமான தலைவா்கள் 21 போ், பாஜகவில் அல்லது பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு ‘பரிசுத்தமானவா்களாக’ ஆக்கப்பட்டிருக்கின்றனா். அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, நாராயண் ராணே, அஜீத் பவாா், சஜ்ஜன் புஜ்பால், அசோக் சவான் உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தியது. ஆனால், இவா்கள் பாஜகவில் இணைந்த பின்னா், அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசுவதையே பாஜக நிறுத்திவிட்டது. தற்போதைய மத்திய ஆட்சியின் கைப்பொம்மையாக இருந்த சிஏஜி வினோத் ராய் ஊழல் எனக் கூறி தயாரித்த அனைத்து அறிக்கைகளும் போலியானவை. ஆனால், நமது ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட விசாரணை அமைப்புகளின் ஒரு அதிகாரியையும் விடமாட்டோம் என்றாா் அவா்.