அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு
தேர்தல் நேரம் என்பதால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீணடும் விசாரணை நடைபெற்றது.
அப்போது தேர்தல் நேரம் என்பதால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் ஜாமீன் வழங்கினால் என்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது தொடர்பாக விரிவான வாதத்திற்கு தயாராக வாருங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மே 7ஆம் தேதி அமலாக்கத்துறை வாதமும் தொடரும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.