30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!
30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!
மங்களூரு: செய்தித்தாள்களில் வரும் மணமக்கள் தேவை விளம்பரம், பல குடும்பங்களில் திருமண விளக்கை ஏற்றிவைத்திருக்கும் நிலையில், தட்சிண கன்னடாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண் குழந்தைக்கு மணமகன் தேடி விளம்பரம் கொடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த விளம்பரத்தில், பிரேத மடுவே நிகழ்ச்சி நடத்துவதற்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண் குழந்தைக்கு ஏற்ற மணமகன் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி பகுதிகளில் வாழும் துளுநாடு சமுதாய மக்கள், தங்களது குடும்பத்தில் குழந்தைகள் யாரேனும் இறந்துவிட்டால், அவர்கள் உயிரோடு இருந்தால் திருமண வயதாகும் காலத்தில், அவர்களைப் போலவே சிறு வயதில் இறந்த மணமக்களை தேடி இருவீட்டாரும் இணைந்து பிரேத மடுவே எனப்படும் இறந்தவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வைபவத்தை நடத்துவது வழக்கம்.
இதற்காகத்தான் இந்த உள்ளூர் நாளிதழில், குலால் இனத்தைச் சேர்ந்த இறந்துபோன பெண்ணுக்கு தகுந்த மணமகன் தேவை என்றும், குழந்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கூறி, உரிய மணமகன் குடும்பம் இருந்தால் தொடர்புகொள்ளுமாறு தொலைபேசி எண்ணையும் அளித்துள்ளனர்.
கடந்த இந்த விளம்பரம் வந்துள்ளது. ஆனால் இதனை யாரோ சமூக ஊடகத்தில் வெளியிட அது வைரலாகியிருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்த்து ஏராளமானோர், அவர்களை தொடர்புகொண்டிருப்பதாகவும், விரைவில் தகுந்த மணமகன் குடும்பம் தேர்வு செய்யப்பட்டு பிரேத மடுவே நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
சிலர், இதுபோன்ற விளம்பரம் கொடுத்திருப்பது குறித்தும், பிரேத மடுவே வைபவம் குறித்தும் விளக்கம் கேட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூதாதையர்களின் வழிபாட்டில், இறந்தவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் ஒரு வழக்கமும் இருந்துள்ளது. இந்த திருமணம் என்பது, வழக்கமான திருமண வைபவத்தைப் போன்றே, இருவீட்டார் குடும்பத்தினர் இணைந்து மிக மகிழ்ச்சிகரமாக செய்து வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.