மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!
பிஜு தனதா தளத்தின் இலவச மின்சாரத் திட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் சமீர் மொஹந்தி சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
ஒடிஸாவில் மீண்டும் பிஜு ஜனதா தள ஆட்சி அமைந்தால், மாநிலத்திலுள்ள மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதுதான் நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவாக இருக்கும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அவருக்கு நெருக்கமானவருமான வி.கே. பாண்டியன் தெரிவித்தார்.
தியோகர் மாவட்டத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த பிறகு விடியோ வெளியிட்டு பேசிய அவர், ஜெகன்னாதரின் ஆசிர்வாதத்துடன் ஜுன் 9ஆம் தேதி நவீன் பட்நாயக் 6வது முறையாக பதவியேற்பார். பொறுப்பேற்றவுடன் அவரின் முதல் கையெழுத்தாக, மாநிலத்தின் 90 சதவீத மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற உத்தரவாகத்தான் இருக்கும்.
மேலும், பிஜு ஸ்வஸ்த கல்யாண் யோஜனா என்ற மாநில சுகாதாரத் திட்டம் அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
பிஜு தனதா தளத்தின் இலவச மின்சாரத் திட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் சமீர் மொஹந்தி சமீபத்தில் விமர்சித்திருந்தார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாகவும், இலவச மின்சாரத்தால் எத்தனை மக்கள் பயனடைவார்கள் என்பதை அவர்களால் கூற முடியுமா என்று சமீர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இலவச மின்சாரம் குறித்து, முதல்வருடனான இந்த விடியோவை வி.கே. பாண்டியன் வெளியிட்டுள்ளார். அதில், பதவியேற்றவுடன் பிறப்பிக்கப்படும் முதல் உத்தரவாக இலவச மின்சாரத் திட்டம் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிஜு ஜனதா தளத்தின் வாக்குறுதிகளில் இலவச மின்சாரத் திட்டம் உள்ளது. 100 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், 100 - 150 யூனிட்டுகளுக்கு 50 யூனிட் இலவசம் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஸாவில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 21 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. மே 13, ஜுன் 20 ஆகிய தேர்திகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஜுன் 25, ஜுன் 1 என இன்னும் இரண்டுகட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.