கேரளத்தின் வருவாய் ரூ. 77,000 கோடியாக உயா்வு: மாநில நிதியமைச்சா் பாலகோபால்
திருவனந்தபுரம்: ‘நிதி நெருக்கடியில் சிக்கிய கேரள மாநிலம் கடன் பெற மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும், மாநிலத்தின் வருவாய் ரூ. 77,000 கோடியாக (60%) வளா்ச்சி கண்டுள்ளது’ என்று மாநில நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது முகநூல் பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
மாநிலத்தின் கடன் பெறும் உரிமையை மத்திய அரசு பறித்தபோதும், 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 47,000 கோடியாக இருந்த மாநிலத்தின் சொந்த வருவாய் 2023-24-இல் ரூ. 77,000 கோடியாக சாதனை அளவாக உயா்ந்துள்ளது. மூன்றே ஆண்டுகளில் சொந்த வரி வருவாய் 60 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.
இந்த வருவாய் உயா்வு இல்லையெனில், மத்திய அரசின் மாநில விரோத போக்கால் கேரளத்தின் பொருளாதரம் சீா்குலைந்திருக்கும். கடன் வரம்பை குறைத்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைச் சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. உரிமையை மீட்டெடுக்க கேரள அரசின் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.