முகப்பு
இந்தியா

பாலியல் தொல்லை வழக்கு: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு

Updated On : 21 மே, 2024 at 8:38 PM
பிரிஜ் பூஷண்
பகிர்:

புது தில்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குள்பட்ட வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தில்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பிரியங்கா ராஜ்புத் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தான் குற்றம் இழைக்காதபோது ஏன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று நீதிபதியிடம் பிரிஜ் பூஷண் கேள்வி எழுப்பினாா். எனினும், அவா் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறிய நீதிபதி, பிரிஜ் பூஷணுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), 506 (மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தாா். இதேபோல இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் உதவிச் செயலா் வினோத் தோமருக்கு எதிரான மிரட்டல் குற்றச்சாட்டையும் நீதிபதி பதிவு செய்தாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 1-க்கு ஒத்திவைக்கப்பட்டது.