வெயிலில் அப்பளம் சுட்ட பாதுகாப்புப்படை வீரர்! வைரல் விடியோ!!
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது
ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வெப்பத்தில் அப்பளம் சுட்ட (பொரித்த) விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பாலைவனத்தின் மணல் கடும் வெப்பத்தில் தகிக்க, அதில் அப்பளத்தை வைத்து எடுக்கும்போது அது மொறுமொறுவென பொரிந்துவிடுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. இந்தியாவுக்குட்பட்ட எல்லைப் பகுதியான பிகானேர், பாகிஸ்தானின் கிழக்கு எல்லையாகவும் உள்ளது.
இதனால் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் கோடை காலம் என்பதால், ராஜஸ்தானின் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் பிகானேர் பகுதியில் 47 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இந்த வெப்பத்தைக் குறிப்பிடும் வகையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மணலில் அப்பளத்தை புதைக்கிறார். அது சில விநாடிகளில் எண்ணையின்றி பொறித்த அப்பளமாக மாறுகிறது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வெப்பத்திலும் பாதுகாப்புப் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர்களுக்கு மக்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.