உ.பி.: மருத்துவமனையில் தீ விபத்து!
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பாரௌட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் நோயளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ”இந்த தீ விபத்து அஸ்தா பன்னோக்கு மருத்துவமனையின் 3 ஆவது தளத்தில் அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் சில நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்” என்றார்.
மாவட்ட குற்றவியல் நீதிபதி ஜிதேந்திர பிரதாப் சிங் கூறுகையில்,”மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் கழிவுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
Advertisement
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 நோயாளிகள், அருகிலுள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள கழிவுகளை அகற்ற 15 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மருத்துவமனையின் இரண்டு அடுக்கு வரை மட்டுமே கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, மேலும் இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.