2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் ஹெலிகாப்டர் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவும், அரசியல் கட்சிகளுக்குத் தேவை அதிகரித்துள்ளதால், ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்கள் 50 சதவீதம் வரை வாடகையை ஏற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நடப்பாண்டு மக்களவைத் தேர்தல் ஜாக்பாட்-ஆக மாறியுள்ளது.
பிரசாரத்துக்காகவும், குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற தேவையின் காரணமாகவும் ஹெலிகாப்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இது வழக்கமானது என்றாலும், இந்தத் தேர்தலில் ஹெலிகாப்டர் பயன்பாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 1ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட (7ஆம் கட்டம்) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுவரை 350 - 400 கோடி வரை ஹெலிகாப்டர் நிறுவனங்கள் வருவாய் ஈட்டியுள்ளன.
பொதுவாகவே தேர்தல் காலத்தில் ஹெலிகாப்டரின் தேவை அதிகரித்து காணப்படும். ஆனால், இந்தத் தேர்தலில் ஹெலிகாப்டர் நிறுவனங்கள் ஈட்டியுள்ள வருவாய், ஹெலிகாப்டர் பயன்பாடு அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. இதன் எதிரொலியாக ஹெலிகாப்டர் வாடகை 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் வாடகை முறை
மணிக்கணக்கில் ஹெலிகாப்டர்கள் வாடகை எடுக்கப்படும். அதற்கான தொகை ஹெலிகாப்டர்களின் வகை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும்.
உதாரணமாக, ஒற்றை என்ஜின் கொண்ட பிஇஎல் 407 என்ற ஹெலிகாப்டரின் வாடகை, ஒருமணிநேரத்துக்கு 1.3 முதல் 1.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 6 - 7 நபர்கள் அமரலாம்.
இரட்டை என்ஜின் கொண்ட அகஸ்டா ஏடபிள்யூ 109 (Augusta AW109) என்ற ஹெலிகாப்டரின் வாடகை ரூ. 2.3-3 லட்சமாக உள்ளது. இதில் 7 - 8 நபர்கள் வரை அமரலாம்.
15 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான அகஸ்டா வெஸ்ட்லேன்ட் (AgustaWestland) ஹெலிகாப்டருக்கு ரூ.4 லட்சம் முதல் வாடகை ஆரம்பமாகிறது. நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு உறுதித்தன்மைக்காக மிகமுக்கிய அரசியல் பிரபலங்கள் மட்டுமே இவ்வகை ஹெலிகாப்டர்களை தேர்வு செய்கின்றனர்.
சாதாரண நாள்களை விட, தேர்தல் பருவத்தையொட்டி ஹெலிகாப்டர் இயக்குபவர்கள் 40-50% சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தியுள்ளனர். 2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலின்போது அவர்களின் ஊதியம் 20 - 30 % உயர்ந்திருந்தது.
இம்முறை மாநில அளவிலான கட்சியிலிருந்தும் ஹெலிகாப்டர்கள் கோரப்படுவதால், அதன் தேவை முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
அதனால், தேர்தல் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்கள் ரூ.350 - 400 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் சீசனையொட்டி ஹெலிகாப்டர்களை ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. குறைந்தது 40 - 50 நாள்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படும். மாநிலங்களுக்கு இடையே அவை இயக்கப்படுவதால், நீடித்த வருவாய் அவர்களுக்கு உறுதியாகிறது.
முன்பட்டியலிடப்படாத ஹெலிகாப்டர்களை இயக்க 165-170 பேரை தயார் நிலையில் வைத்துள்ளதாக ரோட்டரி விங் சொசைட்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் 30-35 பேர் இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர்களை இயக்குபவர்கள். தேவை அதிகரிக்கும்போது அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
45 - 60 நாள்களுக்கு என நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் பயண நேரம் குறைந்தது நாளொன்றுக்கு 2.5 - 3 மணிநேரமாவது இருக்கும். சிலர் 60 நாள்களுக்கு ஒப்பந்தம் செய்தால், ஹெலிகாப்டரின் பயண நேரம் 180 மணிநேரம். எனவே, ஒப்பந்ததாரர்கள் ஹெலிகாப்டரை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும், இந்த பயண நேரத்துக்கான தொகையை கொடுக்க வேண்டியது கட்டாயம். இதில் 30 நாள்களுக்கான பயண நேரத் தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.