பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் அழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப்பில் பிரசாரம் செய்த கார்கே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“பஞ்சாப் இளைஞர்கள் மத்தியில் விரக்தியும், நம்பிக்கையின்மையும் நிலவுகிறது. மாநிலத்தின் எதிர்காலத்துக்கு போதைப் பழக்கம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. வேலைவாய்ப்புக்காக பஞ்சாப் மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி கொள்கையால் பஞ்சாபில் சிறு, குறு தொழில்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு தொழில்களுக்கு உதவி செய்வோம். தொழிலதிபர்கள் அமைப்புகளால் மிரட்டப்படுவது முடிவுக்கு வரும்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள் குறைந்த நிலத்தில் கூட அதிக தானியங்களை பயிரிடுகின்றனர். இதன் காரணமாக நாட்டின் தானிய இருப்பு நிரம்பியுள்ளது. ஆனால், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, மோடி அரசு அவர்களுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் போராட்டத்தில் 700 பேர் உயிர் தியாகம் செய்த போதிலும், எவ்வித மாற்றத்தையும் மோடி கொண்டுவரவில்லை.
மோடி அனைவரையும் அழித்து வருகிறார். அக்னிவீர் திட்டத்தை அறிமுகப்படுத்தி இளைஞரின் மனஉறுதியை உடைத்துள்ளார். 30 லட்சம் அரசுப் பணிகள் காலியாக உள்ளது, ஆனால் மோடி அரசு நிரப்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.