ஓடும் ரயிலில் மருத்துவரை கடித்த பாம்பு!
நீலம்பூர் - சொர்னூர் ரயிலில் நடந்த சம்பவம்..
கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இளம் மருத்துவரை செவ்வாய்க்கிழமை பாம்பு கடித்துள்ளது.
நீலம்பூரில் இருந்து சொர்னூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் ஆயுர்வேத மருத்துவர் காயத்ரி(வயது 25) செவ்வாய்க்கிழமை பயணித்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென்று காயத்ரியின் காலில் பாம்பு கடித்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சக பயணிகளிடம் உதவி கோரியுள்ளார்.
Advertisement
வலபுழா ரயில் நிலையத்தை அடைந்ததும், உடனடியாக ரயிலில் இருந்து இறக்கப்பட்ட காயத்ரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரயிலின் இருக்கைக்கு அடியில் பாம்பு இருந்ததை சக பயணிகள் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து சக பயணி ஒருவர் கூறுகையில், காயத்ரியின் காலில் பாம்பு கடித்திருந்த அடையாளம் இருந்தது, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றார்.
மேலும், சொர்னூர் ரயில் நிலையத்தில் ரயில் முழுவதும் அதிகாரிகள் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ரயிலில் பாம்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.