முகப்பு
இந்தியா

புணே கார் விபத்தில் திடீர் திருப்பம்!

புணே கார் விபத்தில் சிறுவனின் உடனிருந்த நண்பர்கள் வாக்குமூலம்

Updated On : 31 மே, 2024 at 10:54 AM
பகிர்:

புணே கார் விபத்து சம்பவத்தில், கார் ஓட்டிய சிறுவன் மது அருந்தியிருந்ததாக சிறுவனுடன் பயணித்த நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், புணே, கல்யாணி நகரில் மே 19 அன்று அதிகாலை நடைபெற்ற சம்பவத்தில், தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குறுகிய சாலையில் வெளிநாட்டு சொகுசு காரை மணிக்கு 200 கி.மீ.வேகத்தில் ஓட்டியுள்ளார். அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தகவல்தொழில்நுட்பப் பொறியாளா்கள் அனிஸ் அவாதியா, அஸ்வினி கோஸ்தா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து தொடா்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த அவனது பெற்றோரின் அலட்சியம் மக்களின் விமா்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், கார் விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், புணேவில் உள்ள சசூன் பொது மருத்துவமனையின் இரண்டு மூத்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் தொடர் விசாரணையில் கடமை தவறியதற்காக ஏற்கனவே இரண்டு காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சிறுவனின் தந்தை விஷால் அகர்வால், குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, வீட்டின் கார் ஓட்டுநரை சரணடையக் கூறி மிரட்டி கட்டாயப்படுத்தி, வழக்கை திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சிறுவனின் தாத்தா சுரேந்திர குமாரும் கைது செய்யப்பட்டார். மேலும், மகனின் ரத்த மாதிரிக்கு பதிலாக தனது ரத்த மாதிரியை மாற்றி வைக்க முயன்ற குற்றத்திற்காக சிறுவனின் தாயாரும் தேடப்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.