மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8,889.74 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், மது, பரிசுப்பொருள்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்து.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ரசீதுகள், ஆவணங்களுடன் மட்டுமே பணம், ஆபரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் இல்லை. தகுந்த ஆவணங்கள் இல்லாமல் அதிகளவு பணத்தை எடுத்துச் செல்வது வாகன சோதனைகளின் போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.
அந்த வகையில், தோ்தல் நடத்தை விதி அமலாக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம், தங்க நகைகள், மது, பரிசுப்பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.8,889.74 கோடியை எட்டியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் சுமார் 45 சதவீதம் போதைப்பொருள்கள்.
இதுவரை பணமாக ரூ.849 கோடியே 15 லட்சமும், ரூ.814 கோடி மதிப்புடைய 5.39 கோடி லிட்டர் மதுபானங்களும், ரூ.3,958 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும், ரூ.1,260 கோடி மதிப்புடைய ஆபரணங்களும், ரூ.2006 கோடி மதிப்பிலான இதரப் பொருள்களும் பறிமுதல் ஆகியுள்ளன. ரொக்கத் தொகையுடன் சோ்த்து அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8,889 கோடியே 74 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1 முதல் மே 18 வரை நடந்த அதிரடி சோதனைகளில் அதிகபட்சமாக குஜராத்தில் ரூ.1,187.85 கோடி, பஞ்சாப்பில் ரூ.665 கோடி, தில்லியில் ரூ.358 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்திய கடல் எல்லையில் குஜராத்தின் போர்பந்தர் கடற்கரையிலிருந்து 180 கடல் மைல் தொலைவில் 14 பேருடன் சென்றுகொண்டிருந்த 'அல்ராஸா' என்ற சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் படகை அடையாளம் கண்டு இடைமறித்த குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் புதுதில்லியின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் சுமார் ரூ.602 கோடி மதிப்புள்ள சுமார் 86 கிலோ எடைகொண்ட 78 'ஹெராயின்' பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
தெலங்கானாவில் அதிகபட்சமாக ரூ. 114 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகலாந்து, லாடக், லட்சத்தீவு ஆகிய இடங்களில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
கர்நாடகத்தில் ரூ.175 கோடி மதிப்பிலான 1.47 கோடி லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் அதிகபட்சமாக ரூ.195 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற ஆபரணப் பொருள்களும், குஜராத்தில் ரூ.1461 கோடி அளவிலான இதரப் பொருள்களும் பறக்கும் படையினாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின் போது மொத்தம் ரூ.3,476 கோடி கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு மடங்கு அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டவைகளில் பணமாக 0.61 சதவீதம், மதுபானங்கள் 167.51 சதவீதம், போதைப் பொருள்கள் 209.31சதவீதம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் 27.68 சதவீதம், இலவசப் பொருள்கள் 3,235.93 சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.