தீபாவளிக்குப் பின் நகரத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்ட தில்லி மேயர்!
தீபாவளி பண்டிகை நேற்று முடிந்ததைத் தொடர்ந்து தில்லி முழுவதும் பட்டாசு குப்பைகளை சுத்தம் செய்ய தில்லி மேயர் உத்தரவு.
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்தததைத் தொடர்ந்து தில்லி முழுவதும் உள்ள பட்டாசுக் குப்பைகளை உடனடியாக சுத்தம் செய்ய தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் இன்று உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டி கூடுதல் கமிஷனர், துணை கமிஷனர்கள், மாநகராட்சியின் 12 மண்டலங்களைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களிடம் தீபாவளி கொண்டாட்டங்களால் ஏற்பட்ட கழிவுகளை அகற்ற மேயர் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கமாக குப்பைகளை அகற்றும் பணியுடன் சேர்த்து, தில்லி முழுக்க இருக்கும் பட்டாசுக் குப்பைகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்துமாறு தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் துப்புரவுப் பணியாளர்கள் போதாமை குறித்தும், தில்லியில் பல பகுதிகளில் உள்ள மோசமான சுகாதார நிலைமை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
இதையும் படிக்க | தீபாவளிக்கு மறுநாளும் அதிகரித்த காற்று மாசு
குறிப்பாக அதிக காற்று மாசு உள்ள பகுதிகளில் மாசு அளவைக் கட்டுப்படுத்த புகை போக்கும் துப்பாக்கிகள், தண்ணீர் தெளிப்பான்கள் மற்றும் பிற வளங்களை பயன்படுத்து குறித்தும் மேயர் வலியுறுத்தினார்.
தில்லியில் காற்று மாசு காரணமாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல் பல இடங்களில் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.