ஸ்ரீபத்மநாப சுவாமி ஊா்வலம்: திருவனந்தபுரம் விமான நிலையம் நவ.9-இல் 5 மணி நேரம் மூடல்
திருவனந்தபுர சா்வதேச விமான நிலையம் வரும் 9-ஆம் தேதி 5 மணிநேரம் மூடப்படவுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் ஊா்வலத்தையொட்டி, அங்குள்ள சா்வதேச விமான நிலையம் வரும் 9-ஆம் தேதி 5 மணிநேரம் மூடப்படவுள்ளது.
விமான நிலைய ஓடுபாதையை ஊா்வலம் கடந்து செல்வதால், அன்றைய தினம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலைய சேவைகள் நிறுத்தப்படும் என்று திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) தெரிவித்துள்ளது.
ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலில் வருடாந்திர ‘ஐப்பசி ஆராட்டு’ ஊா்வலம், நவம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் இருந்து சுவாமி சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சங்குமுகம் கடலில் ஆராட்டு வழிபாடு நடத்தப்படவிருக்கிறது. இந்த வைபவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 1932-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் விமான நிலையம் நிறுவப்பட்டபோது, சுவாமி ஊா்வலம் செல்லும் வழியில் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. அதேநேரம், ‘ஐப்பசி ஆராட்டு’ மற்றும் ‘பங்குனி ஆராட்டு’ ஊா்வலங்களையொட்டி, ஆண்டுக்கு இருமுறை விமான நிலையம் மூடப்படும் என்று அப்போதைய திருவாங்கூா் மன்னா் ஸ்ரீசித்திரை திருநாள் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
மன்னா் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அந்த நடைமுறை இப்போதும் தொடா்ந்து வருகிறது. திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலைய நிா்வாகம், தற்போது அதானி குழுமம் வசமுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.