மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பற்றி...
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஏற்கெனவே மக்களவையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் பழமையான விமான நிலையங்களில் ஒன்று. தெற்கு தமிழ்நாட்டிற்கான ஒரு முக்கிய நுழைவுவாயிலாக இருக்கிறது. சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பல்வேறு நாடுகளை இணைக்கும். வர்த்தகத்தை, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதுடன் வணிகங்களை ஈர்க்கும் வகையில் மதுரை சர்வதேச விமான நிலையம் இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேபோல கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.