வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...
வினாத்தாள் கசிவைத் தடுக்க 'பொதுத் தேர்வுகள் 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைத் தடுப்பு) சட்டம், 2024-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த கூட்டத்தில், வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில், 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைத் தடுப்பு) சட்டம், 2024-ல் (Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024) சில திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் தேர்வு முறைக்கேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கூடுதல் சிறைத் தண்டனை, பெருந்தொகை அபராதம், வாழ்நாள் தடை, விரைவு நீதிமன்றத்தில் விசாரணை போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வருகின்ற திங்கள்கிழமையே (ஜூலை 27) திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
“மசோதாவை சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறோம். அமைச்சரவை முடிவு குறித்து விளக்கம் அளிக்கப்படும். மாணவர்கள் நலன் சார்ந்த மசோதாவை நிறைவேற்றுவதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது என்று பிரதமர் கூறியுள்ளார். அதையே நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே, அதனை தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் எந்தவொரு உத்தியையும் கையாள்வது சரியல்ல” என்றார்.
இதனிடையே, மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிஜேபி நிர்வாகிகள், ”தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்து முடிவெடுக்க நாளை பகல் வரை அரசு நேரம் கேட்டுள்ளது. அவர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 - Union Cabinet approves
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.