மத்திய பிரதேசத்தில் மனைவியின் முன்பு ‘அங்கிள்’ என்று ஜவுளிக் கடையின் உரிமையாளர் அழைத்ததால் கோபமடைந்த வாடிக்கையாளர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
தலைநகர் போபாலின் ஜட்கேடி பகுதியில் விஷால் சாஸ்த்ரி என்பவர் ஜவுளிக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு ரோஹித் என்பவர் மனைவியுடன் சனிக்கிழமை சேலை வாங்க வந்துள்ளார்.
நீண்ட நேரமாக பல சேலைகளை பார்த்தும் வாங்காமல் இருந்ததால், எவ்வளவு விலைக்கு சேலை எதிர்பார்க்கிறீர்கள் என்று கடையின் உரிமையாளர் விஷால் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரோஹித், 1,000 ரூபாய்க்குள் சேலையை எதிர்பார்ப்பதாகவும், அதற்கு மேல் என்றாலும் பரவாயில்லை காட்டுங்கள் என்று பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய விஷால், ‘அங்கிள் அதிக விலை சேலையையும் காட்டுகிறேன்’ எனத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரோஹித், மீண்டும் அங்கிள் என்று அழைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ரோஹித் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடையைவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிறிது நேரத்தில் வேறு சில ஆட்களை அழைத்து வந்து, விஷாலை சாலையில் இழுத்து தடி மற்றும் பெல்ட்டால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
விஷாலை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிய நிலையில், காயங்களுடன் அருகிலுள்ள காவல் நிலையம் சென்ற அவர், ரோஹித் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து, பரிசோதனைக்காக விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரோஹித் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.