முகப்பு
இந்தியா

பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

Updated On : 12 நவம்பர் 2024, 9:12 am IST
சித்திரப் படம் - TNIE
பகிர்:

புது தில்லி: பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆா்வலருமான ஜெயா தாக்குா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஆறு முதல் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நாப்கின்கள் வழங்க வேண்டும். அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உறைவிட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனு தொடா்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, ‘நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் உள்பட 97.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. தில்லி, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் (100%) மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளத்தில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. வளரிளம் பருவ பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் உள்ளிட்டவற்றை விநியோகிப்பதற்கான தேசிய கொள்கையை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன’ என்று தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. அந்த கொள்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் கடந்த நவ.2-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.