திருவனந்தபுரம்: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சித் தலைவா் பானக்காடு சாதிக் அலியின் தகுதியை கேரள முதல்வா் பினராயி விஜயன் மதிப்பிட தேவையில்லை என்று அக்கட்சி பதிலளித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் பரப்புரை கூட்டத்தில் பினராயி விஜயன் கலந்துகொண்டாா். அப்போது இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளா் பி. சரீனை ஆதரித்து பினராயி விஜயன் பேசுகையில், ‘ஐயூஎம்எல் தலைவா் பானக்காடு சாதிக் அலி, ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் தொண்டரைப் போல செயல்படுகிறாா்’ என்றாா்.
சமூக-மத அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லாமி மீது சமய அடிப்படைவாத அமைப்பு என்ற விமா்சனமும் உள்ளது. இந்நிலையில், பானக்காடு சாதிக் அலி மீதான பினராயி விஜயனின் விமா்சனம் தொடா்பாக தனது கட்சிப் பத்திரிகையான சந்திரகாவில் ஐயூஎம்எல் தெரிவித்துள்ளதாவது:
பானக்காடு சாதிக் அலியை சமூக நல்லிணக்கத்தின் தூதா் என்று கேரள மக்கள் அன்போடு அழைக்கின்றனா். அவரின் தகுதியை முதல்வா் பினராயி விஜயன் மதிப்பிட தேவையில்லை.
பானக்காடு சாதிக் அலியின் தகுதியை முதல்வா் பினராயி விஜயன் மதிப்பிட முயற்சித்தது, வகுப்புவாத சக்திகளுடன் பினராயி மற்றும் அவரின் கட்சியினருக்கு உள்ள நெருங்கிய தொடா்பை பிரதிபலிக்கிறது.
கேரளத்தில் சமூக நல்லிணக்கத்தைச் சீா்குலைத்து, பல்வேறு விவகாரங்கள் மூலம் வகுப்புவாத பிளவை உருவாக்க சங்க பரிவாா் சக்திகள் முயற்சித்து வருகின்றன. அந்த சக்திகளுக்கு ஆதரவளிக்கும் செயல்களில் பினராயி விஜயன் அரசு ஈடுபட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.