கோத்ரா ரயில் எரிப்பு படத்துக்கு பெருகும் ஆதரவு..! உ.பி. முதல்வரை சந்தித்த நடிகர்!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்தார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது ‘எஸ்-6’ படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இதில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது நடைபெற்ற தொடா் சம்பவங்களைத் தழுவி ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட சபா்மதி ரிப்போா்ட் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தை தீரஜ் சர்னா இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு பாஜக அரசியல் தலைவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்துள்ளார். இது குறித்து உ.பி. முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “ மரியாதை நிமித்தமாக இன்று நடிகர் விக்ராந்த மாஸ்ஸி லக்னௌவில் உள்ள அரசு அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு இதன் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், “முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது கௌரமாக கருதுகிறோம். தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழுவை பாராட்டினார். இதற்காக நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.
பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில், உண்மை தற்போது வெளிவந்துள்ளது சிறப்பு. பொய் பிரசாரங்கள் நீண்ட காலம் நிலைக்காது. காலப்போக்கில் உண்மை வெளிவந்தே தீரும்’ என்றதும் குறிப்பிடத்தக்கது.