டிஜிபி மாநாட்டில் பங்கேற்க ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி!
அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டில் பங்கேற்க..
ஒடிசாவில் அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
ஒடிசாவில் டிஜிபி, ஐஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்குகின்றது. இந்த மாநாடு தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
அமித் ஷா முன்னதாக ஒடிசா மாநிலத் தலைநகருக்கு வருவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தை மாலை 4.20 மணியளவில் சென்றடைவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சிக்காகச் செய்யப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு மேல் புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகார வரம்பில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி மாலை 4.20 மணிக்கு புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, விமான நிலையத்தில் நடைபெறும் பாராட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார். பின்னர் மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார் மோடி.
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பாஜக அலுவலகத்தில் அவர் தலைமையில் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர் மீண்டும் ஆளுநர் மாளிகையில் இரவு தங்கவுள்ளார்.
ஒடிசாவில் முதன்முறையாக நடைபெறும் அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டிற்காக சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாநிலச் செயலக லோக் சேவா பவனுக்கு பிரதமர் வருகைதர உள்ளார். நிகழ்ச்சிகளை முவுத்துவிட்டு மறுநாள் புது தில்லி புறப்படுகிறார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஒடிசா மாநிலத்துக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.