முகப்பு
இந்தியா

தேசியக்கொடியை ஏந்திய கைகளால் காலணியை கழற்றிய சம்பவம்: கர்நாடக முதல்வருக்கு பாஜக கண்டனம்!

தேசியக்கொடியை அவமதித்தாரா கர்நாடக முதல்வர்?

Updated On : 2 அக்டோபர் 2024, 5:34 pm IST
பகிர்:

காந்தி ஜெயந்தியன்று தேசியக்கொடியை அவமதிக்கும் விதத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் செயல்பாடு அமைந்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 155-ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று(அக். 2) தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தச் சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது காலணிகளை கழற்ற மறந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கொடிக்கம்பத்தின் அருகே சென்று நின்றுவிட்ட அவரிடம், இதுகுறித்து, உடனிருந்த தொண்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடனடியாக அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், சித்தராமையாவின் காலணிகளைக் கீழே குனிந்து கழற்றி விட்டுள்ளார்.

தனது கைகளில் தேசியக் கொடியை ஏந்தியிருந்த அந்த நபர், தேசியக்கொடியுடன் சித்தராமையாவின் காலணிகளைத் தொட்டு அவிழ்த்துவிட்டுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த சம்பவம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதுதான் தேசியக் கொடிக்கு அளிக்கப்படும் மரியாதையா? என்று பல்வேறு தரப்பிலிருந்தும் சித்தராமையாவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் கிளம்பியுள்ளன. இந்த விவகாரத்தில் சித்தராமையா மன்னிப்பு கோர வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “தேசியக்கொடியும், தேசியவாதமும், தேசத்துக்காக பாடுபடுபவர்களும் காங்கிரஸுக்கு எப்போதுமே சிறுமையானவர்களே. காந்தி ஜெயந்தியன்று, தேசியக் கொடியை ’அடிமைத்தனத்தின்’ அடையாளமாக காங்கிரஸ்காரர்கள் காண்கின்றனர். முதல்வரும் இதனை எதிர்க்கவில்லை. இது தேசத்துக்கும் தேசியக் கொடிக்குமான அவமரியாதை. இதற்காக முதல்வர் சித்த்ராமையாவும் காங்கிரஸும் இந்திய மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பாஜக வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.