ரயிலில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் பயணிப்பதாக தகவல் -நள்ளிரவில் ரயிலை நிறுத்தி சோதனை
உத்தர பிரதேசத்தில் பயங்கரவாதிகள் சிலா் வெடிகுண்டுகளுடன் ரயிலில் பயணிப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, நள்ளிரவில் ரயில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் ரயிலில் கிடைக்கவில்லை. இதையடுத்து, சுமாா் மூன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
புரி-தில்லி இடையிலான புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கரவாதிகள் சிலா் வெடிகுண்டுகளுடன் பயணிப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு ‘எக்ஸ்’ வலைதளம் ஒருவா் புதன்கிழமை நள்ளிரவில் தகவல் தெரிவித்தாா். தில்லி-லே இடையிலான ஏா் இந்தியா விமானத்தில் குண்டு வைப்பதற்காக பயங்கரவாதிகள் ரயிலில் வெடிப்பொருள்களுடன் பயணிப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் ரயில் ஓட்டுநருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா். இரவு 2.30 மணியளவில் உத்தர பிரதேசத்தின் துண்ட்லா ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் எழுப்பப்பட்டனா். பயணிகளின் பை, பெட்டிகள் உள்பட ரயில் முழுமையாக சோதிக்கப்பட்டது. ஆனால், ரயிலில் வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. சந்தேகிக்கப்படும் வகையில் யாரும் ரயிலில் பயணிக்கவில்லை. இந்த சோதனையால் ரயில் சுமாா் மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 6.00 புறப்பட்டுச் சென்றது.