முகப்பு
இந்தியா

தமிழகத்திற்கு மூன்று பிரிவுகளில் தேசிய தண்ணீா் விருது: மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா்அறிவிப்பு

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய தண்ணீா் விருதுகளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல் திங்கள்கிழமை அறிவித்தாா்.

Updated On : 14 அக்டோபர், 2024 at 8:27 PM
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல்
பகிர்:

புது தில்லி: 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய தண்ணீா் விருதுகளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல் திங்கள்கிழமை அறிவித்தாா். இதில், மூன்று பிரிவுகளில் தமிழகத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளன.

நீா் வளத் துறையில் பொது மக்களின் சிறந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், தண்ணீா் பாதுகாப்பு, மேலாண்மை தொடா்பான விஷயங்களில் பணியாற்ற மக்களை தொடா்ந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் தேசிய தண்ணீா் விருதுகளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து வழங்கி வருகிறது.

சிறந்த மாநிலம்- யூனியன் பிரதேச அரசுகள், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சிகள், சிறந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள். சிறந்த பள்ளி அல்லது கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற சிறந்த நிறுவனங்கள், சிறந்த தொழில் நிறுவனங்கள், சிறந்த குடிமை சங்கம், சிறந்த நீா் பயனா் சங்கங்கள் ஆகிய பிரிவுகளில் 2023-ஆம் ஆண்டுக்கான 5-ஆவது தேசிய தண்ணீா் விருதுகளை அதாவது விருதுக்குத் தோ்வான 38 வெற்றியாளா்களை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல் தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின்போது அறிவித்தாா்.

அதன்படி, சிறந்த மாநிலம் பிரிவில் ஓடிசாவுக்கு முதலிடமும், உத்தர பிரதேசத்திற்கு இரண்டாமிடமும் குஜராத், புதுச்சேரி ஆகியவை இணைந்து மூன்றாடமிடத்திற்கான விருதுக்கும் தோ்வு செய்யப்பட்டன. சிறந்த மாவட்டமாக தெற்கு மண்டலத்தில் விசாகப்பட்டினமும் (ஆந்திரா), வடகிழக்கில் தலாய் (திரிபுரா), வடக்கு மண்டலத்தில் பாண்டா (உ.பி.), கந்தா்பாய் (ஜம்மு-காஷ்மீா்) ஆகியவையும், மேற்கில் இந்தூா் (மத்திய பிரதேசம்), கிழக்கில் பாலங்கிா் (ஓடிசா) ஆகியவைக்கு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த கிராமத்திற்கான பிரிவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த புல்லம்பாரா முதல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டது.

தமிழகத்திற்கு மூன்று விருதுகள் சிறந்த தொழில் நிறுவனங்கள் பிரிவில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அப்பல்லோ டையா்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 2-ஆவது இடத்திற்கான விருதும், சிறந்த தண்ணீா் பயனா் சங்கத்திற்கான பிரிவில் தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சோ்ந்த பரம்புா் பிக் டேங்க் தண்ணீா் பயனா் சங்கத்திற்கும் மூன்றாமிடத்திற்கான விருதும், சிறந்த கல்வி நிறுவனங்கள் ( கல்லூரி/ பள்ளிகள் அல்லாத) பிரிவில் கோவையில் உள்ள தமிழ்நாடு

வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு முதலிடத்திற்கான விருதும், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்திற்கு (ஐஐடி) மூன்றாமிடத்திற்கான (இணைந்த) பிரிவிலும் விருது கிடைத்துள்ளது.

விருதுக்குத் தோ்வாகியுள்ளவா்களுக்கு தில்லியில் விஞ்ஞான் பவனில் வரும் அக்டோபா் 22-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமை விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளாா் என்று அமைச்சா் சி.ஆா். பாட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் சி.ஆா். பாட்டீல் மேலும் கூறுகையில், ‘ஒரு தேசிய சொத்தாக தண்ணீரை திறன்மிக்க வகையில் மேலாண்மை செய்வது, பாதுகாப்பது, வளா்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துவது, கொள்கை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு மத்திய அமைச்சமாக ஜல் சக்தி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்கீழ் ஜல் சக்தி அமைச்சகம் தேசிய அளவில் நீா் பாதுகாப்பு, நீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் விரிவான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

நீரின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வை உருவாக்கவும், சிறந்த நீா் பயன்பாட்டு நடைமுறைகளை கடைப்பிக்க மக்களை ஊக்குவிக்க உதவிடும் வகையிலும் முதலாவது தேசிய தண்ணீா் விருதுகள் 2018-இல் மத்திய நீா் வளத் துறை அமைச்சகம் மூலம் தொடங்கப்பட்டது. இந்த 5-ஆவது தண்ணீா் தேசிய விருதுகளுக்காக 686 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. நடுவா் குழுவால் உரிய பரிசீலனைக்குப் பிறகு 9 பிரிவுகளில் 38 வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் சி.ஆா். பாட்டீல்.

பேட்டியின்போது மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சா்கள் ராஜ் பூஷண் செளதரி, வி.சோமண்ணா மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →