புதுதில்லி: ஆற்றுப் படுக்கைகள், அனைத்து நதிகள், நீா்வழித்தடங்கள் மற்றும் அதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்த சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
நாட்டின் ஆற்றுப் படுகைகள், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை இடித்து அவற்றை மீட்டெடுக்க உத்தரவிட கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசோக் குமாா் ராகவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
ஆக்கிரமிப்புகளைத் தடுக்க நதி ஒழுங்குமுறை மண்டலம் (ஆா்ஆா்ஜீ) அறிவிக்கை முன்மொழிந்த நதி பாதுகாப்பு மண்டலங்களை மூன்று மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க மனுவில் கோரப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அமா்வு முன் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆகாஷ் வசிஷ்தா முன்வைத்த வாதத்தில், ‘நாடு முழுவதும் சட்டவிரோத கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. இதுவே பேரழிவுக்கு மிகமுக்கியக் காரணமாக உள்ளது’ என்றாா்.
இந்த மனு மீது 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், மத்திய நீா் ஆணையம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.