ரூ. 2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரின்கீழ் மத்திய அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கம் துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி மீது மேற்கண்ட மோசடி புகார் சுமத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள(ஜேடிஎஸ்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தேவாவந்த் ஃபல் சிங் சௌஹாணின் மனைவியான சுனிதா சௌஹாண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கோபால் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தனது குடும்பத்தில் ஒருவருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கூறி ரூ. 2 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கோபால் ஜோஷி பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார் சுனிதா சௌஹாண்.
மேலும், கோபால் ஜோஷியின் மகன் அஜய் ஜோஷிக்கும், மத்திய அமைச்சரின் சகோதரி எனக் கூறிக்கொண்டு சுனிதா சௌஹாணிடம் அறிமுகமான விஜயலக்ஷ்மி ஜோஷிக்கும்(விஜய குமாரி) மேற்கண்ட குற்றச்சாட்டில் தொடர்பிருப்பதாகவும் அவர் புகாரில் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, மகாராஷ்டிரத்தின் கோல்ஹாபூரில் இருந்த கோபால் ஜோஷியையும், புணேயில் இருந்த அவரது மகன் அஜய் ஜோஷியையும் பசவேஷ்வரநகர் காவல்துறையினர் இன்று(அக்.19) கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இருந்த கோபால் ஜோஷியை கைது செய்த பெங்களூரு காவல்துறை, கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் உள்ள கோபால் ஜோஷியின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனது சகோதரர் கோபால் ஜோஷியுடனான உறவை, தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே துண்டித்துவிட்டதாகவும் தனக்கு சகோதரிகள் யாருமில்லை என்பதையும் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெளிவுபடுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.