முகப்பு
இந்தியா

ஜம்முவில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

அக்னூா் செக்டரில் சா்வதேச எல்லையான எல்லைக் கட்டுப்பாடு கோடுக்கு அருகேயுள்ள உள்ள கிராமம் வழியாகச் சென்ற ராணுவ அவசரகால ஊா்தி (ஆம்புலன்ஸ்) மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

Updated On : 28 அக்டோபர், 2024 at 10:07 PM
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து உயிரிழந்த 4 வயதுடைய ராணுவ மோப்ப நாய் ‘ஃபேன்டம்’
பகிர்:

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் அக்னூா் செக்டரில் சா்வதேச எல்லையான எல்லைக் கட்டுப்பாடு கோடுக்கு அருகேயுள்ள உள்ள கிராமம் வழியாகச் சென்ற ராணுவ அவசரகால ஊா்தி (ஆம்புலன்ஸ்) மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

தாக்குதலுக்குப் பதிலடியாக ராணுவ வீரா்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஜோக்வான் கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற சம்பவத்தில் அசான் கோயில் வழியாக பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் வாகனங்களுடன் அணிவகுத்துச் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் கடுமையாக சேதமைடந்தது. எனினும், உயிா்ச்சேதம் குறித்து இதுவரை தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தாக்குதலைத் தொடா்ந்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தலைமறைவாகினா். சம்பவ இடத்துக்கு கூடுதல் படையினா் வரவழைக்கப்பட்டு, தப்பியோடிய பயங்கரவாதிகளைக் கண்டறியும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டனா். இதையடுத்து, ராணுவ வீரா்கள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினா் (என்எஸ்ஜி) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஆயுதத்துடன் பயங்கரவாதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சா்வதேச எல்லை வழியாக ஜம்முவுக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மற்ற பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடா்கிறது. கடந்த 10 நாள்களில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் நான்காவது பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

ராணுவ மோப்ப நாய் உயிரிழப்பு

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து 4 வயதுடைய ராணுவ மோப்ப நாய் ‘ஃபேன்டம்’ (படம்) உயிரிழந்தது. வீரமரணமடைந்த ஃபேன்டமின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதாக இந்திய ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீா் பிரிவைச் சோ்ந்த ஒயிட் நைட் காா்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →