முகப்பு
இந்தியா

உ.பி. இடைத்தோ்தல்: சுயேச்சையாக மனுதாக்கல் செய்த காங்கிரஸ் தலைவா் நீக்கம்

உத்தர பிரதேச இடைத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்த காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 அக்டோபர், 2024 at 8:41 PM
பகிர்:

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச இடைத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்த காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சி கோரிய 5 தொகுதிகளை கூட்டணிக் கட்சியான சமாஜவாதி ஒதுக்கவில்லை. இரு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. மேலும், காங்கிரஸுடன் ஆலோசிக்காமல் வேட்பாளா்களையும் சமாஜவாதி அறிவித்தது.

இதையடுத்து, சட்டப் பேரவை இடைத் தோ்தலில் போட்டியிடவில்லை என்றும், ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில், புல்பூா் தொகுதியில் பிரயாக்ராஜ் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஷியாம் கிஷோா் சுக்லா சுயேச்சையாக மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவா் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவா் காங்கிரஸில் இருந்த 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷியாம் கிஷோா் கூறுகையில், ‘கட்சியின் மாநிலத் தலைவா் அஜய் ராய் உள்ளிட்டோா் என்னைப் பற்றி மத்திய தலைமைக்கு தவறான தகவல்களை அளித்துள்ளனா். புல்பூா் மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனா். எனவேதான் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்’ என்றாா்.

புல்பூா் தொகுதியில் சமாஜாவாதி சாா்பில் முஸ்தபா சித்திக்கி போட்டியிடுகிறாா். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →