அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
புது தில்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரும், பதிவுத் துறை தலைவருமான மிருத்யுஞ்ஜய் குமாா் நாராயணின் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே அா்த்தம். ஆனால் இரு முக்கிய விவகாரங்களில் தெளிவு கிடைக்கவில்லை.
புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்து ஜாதிகளின் விரிவான கணக்கெடுப்பும் இடம்பெறுமா? அரசமைப்புச் சட்டத்தின்படி, இத்தகைய ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது முற்றிலும் மத்திய அரசின் பொறுப்பாகும்.
மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்தின் பலத்தையும் தீா்மானிக்க புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுமா? இந்தக் கணக்கெடுப்பு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதகமாக அமையுமா?
இவ்விரு முக்கிய விவகாரங்களில் தெளிவு பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டினால் மிகப் பொருத்தமாக இருக்கும்’ என்றாா்.