முகப்பு
இந்தியா

ரூ.12,850 கோடியில் சுகாதாரத் துறை திட்டங்கள் இன்று தொடக்கம்!

70 வயது, அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

Updated On : 29 அக்டோபர், 2024 at 3:14 AM
பகிர்:

சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் ரூ.12,850 கோடியிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 29) அடிக்கல் நாட்டுகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களை புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்திலிருந்தவாறு காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களில் முக்கியமாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும்(வருமான அளவைப் பொருட்படுத்தாமல்) சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

11 துணை சுகாதார நிறுவனங்களில் ட்ரோன் சேவையும் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் யு-வின் தளத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரில் உள்ள கோதபட்னாவில் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ஒடிஸா மாநிலம் கோர்தா, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ’யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு’ பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

மருந்துகள், தீவிர சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட பல உயர்தர மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 5 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 

ஹைதராபாத், பெங்களூரு, குஜராத்தின் வாபி, ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா, ஹிமாசலப் பிரதேசத்தின் நலகர் ஆகிய இடங்களில் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்து உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →