பேரிடர்களை எச்சரிக்கும் கட்டமைப்பு: கேரள அரசு திட்டம்
வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கட்டமைப்புகளை உருவாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கட்டமைப்புகளை உருவாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளத்தின் வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 400}க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியின் விவரம்:
கேரளத்தின் 9 கடலோர மாவட்டங்களில் உள்ள 18 கடலோர கிராமங்களிலும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள 7 மலைப்பாங்கான பஞ்சாயத்துகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
ரேடார் கருவிகள் உள்பட வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்புகளை கூடுதலாக வழங்குமாறு கேரள அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ளது.
நிலச்சரிவுகள் ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் கட்டமைப்புகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன. மத்திய அரசு அமைப்புகள் இது தொடர்பாக தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்தக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தேசிய அமைப்புகளின் சார்பில் உள்ளூர் ஆய்வு மையங்களை அமைக்குமாறு மத்திய அரசை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்களை சமாளிப்பதற்கு நிலத்தை அறிவியல்பூர்வமாக பயன்படுத்தவும், பேரிடர் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கட்டமைப்புகளை உருவாக்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்துக்கென்று பிரத்யேகமாக பருவநிலை மாற்ற ஆய்வு நிறுவனத்தை நாங்கள் அமைத்துள்ளோம். இது போன்ற நிறுவனங்களை வலுப்படுத்த நிதி உதவி தேவைப்படுகிறது.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் அச்சங்களையும், கவலைகளையும் போக்குவதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன். வயநாடு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது.
இது பாதிக்கப்பட்ட சமூகத்தினர் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளவும், இயல்புநிலை திரும்பியது என்ற உணர்வை உருவாக்கவும் உதவும் என்றார்.