மும்பை லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ஒரே நாளில் ரூ.50 லட்சம் நன்கொடை
மும்பை லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ஒரே நாளில் ரூ.50 லட்சம் நன்கொடை குவிந்தது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விதவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் பத்து நாள்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பாக லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ஒரே நாளில் ரூ.50 லட்சம் நன்கொடை குவிந்துள்ளது.
மும்பை முழுவதும் விநாயகர் கோயில்களிலும், பொதுவிடங்களிலும் மிகப்பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பத்து நாள்களும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜ சர்வஜனிக் கணேசர் உற்சவம் சிறப்பாகத் தொடங்கியது. மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை, முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். ஒரே நாளில் பக்தர்கள், ரூ.48,30,000-ஐ நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.
இங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்கிறார்கள். பல இடங்களிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வானது விநாயகர் சதுத்தியான செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி ஆனந்த சதுர்தசியன்று நிறைவடைவது வழக்கம்.
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது கடினம் என்பதால் நேற்று கிட்டத்தட்ட 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. வெறும் ஒன்றரை நாள்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அழுதபடி விநாயகருக்கு விடைகொடுத்தனர்.